இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு..!

இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2025-12-09 13:54 IST

புதுடெல்லி,

நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர்.

இதையடுத்து இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, பயணிகளின் பரிதவிப்பை குறைக்க உடனடியாக விமான சேவைகளை சீரமைக்க உத்தரவிட்டது. நிலைமை சீராகும் வரை விமானிகளின் பணிநேர கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்தது. அதேபோல இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து காரணமாக மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணமும் பல மடங்கு உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு கட்டண உச்சவரம்பை கொண்டு வந்தது.

இண்டிகோ நிறுவன விமானங்களின் செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இண்டிகோ நிறுவனம் சனிக்கிழமை வரை விமான ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.610 கோடி வரை திரும்ப கொடுத்து உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில், இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அட்டவணையின்படி, விமானங்கள் திறமையாக இயக்க தவறியதால் 5% சேவைகளை குறைத்து நாளை (10-ம் தேதி) மாலை 5 மணிக்குள் திருத்தப்பட்ட அட்டவணையை சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்படும் சேவைகளை பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்