கரூர் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-31 12:46 IST

புதுடெல்லி,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்கிடையில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நி ஆஜரானார்கள். இதைப்போல கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 6 அதிகாரிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்களிடம் 9 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது. காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகம் வந்த அவர்களிடம் 11:30 மணி அளவில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்து மாலை வரை நீண்டது. விசாரணை முடிந்து அவர்கள் மாலை 6:45 மணி அளவில் வெளியே வந்தனர். நேற்று மட்டும் அவர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் 3-வது நாளாக இன்றும் தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்