காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்ட்டரில் 8 வீரர்கள் காயம்; தேடுதல் வேட்டை தீவிரம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சத்ரூ பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;

Update:2026-01-19 13:29 IST

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு நேற்று சென்றனர். அவர்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இரு தரப்பிலும் துப்பாக்கிகளால் சுட்டு கடுமையான தாக்குதல் நடந்தது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த என்கவுன்ட்டரில் ராணுவம் தரப்பில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டையானது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்