முதுநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு: பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி
நீட் தேர்வு என்பது தகுதியான டாக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் என சொல்லப்பட்டு வருகிறது.;
புதுடெல்லி,
அரசு, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ, எம்.டி.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த முதுநிலை நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.
2025-26-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 301 நகரங்களில் 1,052 தேர்வு மையங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். ஒரே ஷிப்டில் கணினி வாயிலாக முதல்முறையாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வாக இந்த தேர்வு பார்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து 17 நகரங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் வீதம் 800 மதிப்பெண்களுக்கு தேர்வு கணக்கிடப்படும். தவறாக விடையளித்தால் ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு 'நெகட்டிவ்' மதிப்பெண்ணும் உண்டு.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை 14 பேர் எடுத்து இருக்கின்றனர். இதுதவிர பூஜ்ஜியத்துக்கு கீழ் 13 பேர் மைனஸ் மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். இவ்வளவு குறைவாக மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அவர்களும் தகுதியுடையவர்களாகவே கருதப்படுவார்கள் என அறிவித்திருப்பதுதான் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2023-ம் ஆண்டிலும் இதேபோல் தேர்வை எழுதி இருந்தாலே, தேர்வர்கள் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அதேபோல தற்போதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 'பூஜ்ஜியம்' மற்றும் 'மைனஸ்' மதிப்பெண் பெற்றவருக்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் இடம் கிடைக்க உள்ளது.
நீட் தேர்வு என்பது தகுதியான டாக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் என சொல்லப்பட்டு வரும் சூழலில், தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்காதவர்களும் தகுதியானவர்கள் என்று அறிவிப்பது, இந்த தேர்வு முறையையே சீர்குலைக்கிறது என்றும், அப்படி அறிவிப்பதற்கு எதற்காக தேர்வை நடத்த வேண்டும்? என்றும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். இதேபோல், மேலும் சில கல்வியாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்