‘புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது’ - பிரதமர் மோடி
அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் கீதை நமக்கு கற்பிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண மடம் சார்பில் நடைபெற்ற கீதை பாராயண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு பகவத் கீதையை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது;-
“பகவத் கீதை அமைதி மற்றும் உண்மைக்காக பாடுபடவும், அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு கற்பிக்கிறது. நாங்கள் "உலகமே ஒரே குடும்பம்" என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும் தர்மத்தை பாதுகாப்பவர்களை தர்மம் பாதுகாக்கிறது என்று கூறுகிறோம்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். அந்த தாக்குதலுக்கு நமது அரசு, இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்ததை இந்த தேசம் கண்டது. நமது செங்கோட்டை கிருஷ்ணரின் கருணையை வழங்கும், அதே சமயம் மிஷன் சுதர்சன் சக்ராவையும் அறிவிக்கும். ‘மிஷன் சுதர்சன் சக்ரா’ நாட்டின் முக்கிய தலங்கள், தொழில்துறை மற்றும் பொது இடங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக முந்தைய அரசாங்கங்கள் அமைதி காத்து வந்தன. ஆனால் புதிய இந்தியா தனது மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது. தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சம், அனைவருடனும் தோழமையுடன் செல்வதில் நம்பிக்கை கொள்வதும், அதே சமயம், தர்மத்தை பாதுகாப்பதற்காக எழுந்து நிற்பதும் ஆகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.