பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. வலிமையை காட்டிய நிதின் நபீன்

பா.ஜ.க.வின் செயல் தலைவர் நிதின் நபீன் இன்று மாலை 4 மணியளவில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேச இருக்கிறார்.;

Update:2025-12-23 15:39 IST

பாட்னா,

பா.ஜ.க.வின் செயல் தலைவராக சமீபத்தில் நிதின் நபீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியில் இளம் வயதில் இந்த பதவியை அவர் அடைந்து இருக்கிறார். 45 வயதுடைய அவர் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆவார். பீகார் அமைச்சரவையில் சாலை கட்டுமான மந்திரியாகவும் அவர் உள்ளார். இந்நிலையில், கட்சி பொறுப்பை ஏற்று கொண்ட பின்னர் முதன்முறையாக அவர் இன்று, பீகாரின் பாட்னா நகரில் வாகன பேரணியை நடத்தி கட்சியின் வலிமையை வெளிப்படுத்தினார்.

அவருடன் மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய், பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் சராவ்கி மற்றும் பீகார் துணை முதல்-மந்திரி விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் சென்றனர்.

இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. நித்யானந்த ராய் கூறும்போது, உலகின் பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. எண்ணற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வலிமையுடன் கட்சி உருவாகி உள்ளது. பாடலிபுத்திரா புனித பூமிக்கு நிதின் நபின் வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க ஒட்டுமொத்த பீகார் மக்களும் வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

அவர் இன்று மாலை 4 மணியளவில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேச இருக்கிறார். இரவு 7.30 மணியளவில் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளை சந்தித்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதேபோன்று, கட்சி எம்.பி.க்களிடம் அவர் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்படுவார்.

Tags:    

மேலும் செய்திகள்