அரசு பஸ்களை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு முடிவு
தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து வளாகத்தில் விரைவில் பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று மந்திரி கிருஷ்ண சந்திர மொகபத்ரா கூறியுள்ளார்.;
புவனேஸ்வர்,
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசால் இயக்கப்படும் பஸ்களை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரி கிருஷ்ண சந்திர மொகபத்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவ வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மந்திரி, மாநில பஸ் சேவையை இயக்கும் தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 20 பெண் விண்ணப்பதாரர்கள் சிறப்பு மின்சாரப் பஸ் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக ஜனவரி 31 அன்று புனேவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஜனவரி 3 அன்று ரூபாலி சதுக்கத்தில் மாநில அரசுப் பஸ் தொடர்பான விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து வளாகத்தில் விரைவில் பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று மந்திரி கிருஷ்ண சந்திர மொகபத்ரா கூறினார். இந்த நிறுவனம் நடைமுறை ஓட்டுநர் திறன்கள், நடத்தை பயிற்சி, போக்குவரத்து விதிகள், வழித்தட ஒழுக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.