நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-24 22:16 IST

புதுடெல்லி,

உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-

“நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அது அன்பு மற்றும் கருணையின் செய்தியை உலகிற்கு சொல்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துகிறது.

இந்த புனிதமான பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி, நம்மை ஊக்கப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதையை பின்பற்றி, அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம்”

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்