ரசகுல்லா தீர்ந்து போனதால் உறவினர்கள் அடிதடி... பாதியில் நின்ற திருமணம்

வாக்குவாதம் அடிதடியாக மாறி, திருமண மண்டபமே கலவரமாக காட்சியளித்தது.;

Update:2025-12-06 20:43 IST

பாட்னா,

பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் கடந்த நவம்பர் 29-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு சென்று ரசகுல்லா கேட்டுள்ளனர்.

ஆனால் அங்கு ரசகுல்லா தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிலர் கோபமடைந்து கத்த தொடங்கினர். சிலர் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மணமகன் வீட்டாருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் அடிதடியாக மாறி, திருமண மண்டபமே கலவரமாக காட்சியளித்தது.

இந்த சம்பவத்தால் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணப்பெண் வீட்டார் கோபித்துக் கொண்டு அங்கிருந்து அதிரடியாக கிளம்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த அனைவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த சம்பவத்தால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான மணப்பெண் வீட்டார், இனி இந்த திருமணத்தில் தங்களுக்கு இஷ்டம் இல்லை என்று கூறிவிட்டனர்.

அவர்களை சமாதானம் செய்ய மணமகன் வீட்டார் மற்றும் ஊர் பெரியவர்கள் உள்ளிட்டோர் பலமுறை முயன்றுள்ளனர். ஆனால் மணப்பெண் வீட்டார் தங்களுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என உறுதியாக கூறிவிட்டனர். ரசகுல்லாவால் ஒரு திருமணம் நின்று போன சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்