சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதல்; சிறுவன் படுகாயம்

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2026-01-05 14:35 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டம் கோர்ஷொலி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி பதுக்கி வைத்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த 15 வயதான ராம் போட்டம் என்ற சிறுவன் இன்று காலை வனப்பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது, நக்சலைட்டுகள் பதுக்கி வைத்த கண்ணிவெடியில் சிறுவன் ராம் கால் வைத்துள்ளான். இதில் கண்ணிவெடி வெடித்ததில் சிறுவன் ராம் படுகாயமடைந்தான்.

இதையடுத்து விரைந்து சென்ற கிராமத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Tags:    

மேலும் செய்திகள்