தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி
பேரிச்சம்பழத்தை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கிய நபர், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.;
நகரி,
ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). தெலுங்குதேசம் கட்சி தொண்டர். இவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது வழக்கம்.
சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக தெரிகிறது. இதில் ஒரு பழத்தை கடித்து மென்று திங்காமல் விழுங்கி விட்டார். அந்தப்பழம் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனந்தபுரத்தில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். கங்காதருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவசரமாக பேரிச்சம்பழம் சாப்பிட்டதால் ஒரு உயிரே போய்விட்டது.