வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
வெனிசுலா நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
சென்னை,
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி அதிபர் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். வெனிசுலாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கராகஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது +58-412-9584288 என்ற அவசர தொலைபேசி எண் (வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும்) மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது இணையதளத்தில், தாக்குதல் பற்றிய செய்தியை வெளியிட்டது. இதன்படி வெனிசுலாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே அங்கு இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.