விதர்பா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பயணியின் விலையுயர்ந்த பொருட்கள் கண நேரத்தில் திருட்டு; 2 பேர் கைது
ரெயில் பயணி அம்ரித்கரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.65 லட்சம் ஆகும்.;
புனே,
மராட்டியத்தின் நாசிக் நகரை சேர்ந்தவர் மயூர் திலீப் அம்ரித்கர் (வயது 30). ஒரு வேலையாக தானே நகருக்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பியுள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பை ஒன்றை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றுள்ளனர்.
இதுபற்றி மூத்த காவல் ஆய்வாளர் பந்தாரி காந்தே இன்று கூறும்போது, மும்பை-கோண்டியா விதர்பா எக்ஸ்பிரஸ் ரெயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டி எண் 5-ல் ஏறிய அம்ரித்கர், முன்பதிவு இருக்கையில் அமர்ந்துள்ளார். பை உள்ளிட்டவற்றை எடுத்து வைத்து கொண்டு இருந்தவர், திடீரென ஒரு பையை காணாமல் திகைத்து போனார்.
அதில், லேப்டாப், கேமராக்கள், பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் இருந்துள்ளன. ரெயில் கல்யாண் பகுதிக்கு வந்ததும், அம்ரித்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் ரெயில்வே போலீசார் இரண்டரை மணிநேரத்தில், பையை கொள்ளையடித்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பையையும் மீட்டனர்.
ரெயில் பயணி அம்ரித்கரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.65 லட்சம் ஆகும். இதன்பின்னர் திலீப்பிடம் அவருடைய பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன என போலீசார் தெரிவித்தனர்.