புதுவையில் விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்: தொண்டர்கள் முண்டியடிப்பு
விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.;
புதுவை,
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்குள் மற்றும் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தொண்டர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஸ் இல்லாத தொண்டர்களும் கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் நுழைய முயன்றதால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையில் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. விஜயின் பொதுக்கூட்டத்தால் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.