திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்த காதலனை கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்

சமீர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விஜயாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.;

Update:2025-11-18 08:25 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோல்கும்பாஸ் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அமன் காலனியில் வசித்து வந்தவர் தயபா (வயது 25). இவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சமீர் என்கிற பி.கே. இனந்தர் (26) என்பவர் வசித்து வந்தார். அதாவது கணவன்-மனைவியாக இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

சமீபகாலமாக தயபா, சமீர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல் சம்பவத்தன்று இரவும் அவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தயபா, தனது சகோதரர் அஸ்லம் பகவானுடன் சேர்ந்து சமீரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அஸ்லம் பகவான் தப்பிச் சென்றுள்ளார். கொலையான சமீர் உடலுடன் அதே வீட்டில் தயபா விடிய, விடிய தங்கியிருந்துள்ளார்.

நேற்று காலை 8 மணி அளவில் தயபா, கோல்கும்பாஸ் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்த காதலனை கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசாரிடம் கூறி தயபா சரண் அடைந்தார்.

இதையடுத்து அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் அஸ்லம் பகவானையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கொலை நடந்த வீட்டுக்கு போலீசார், கைதான 2 பேரையும் அழைத்துச் சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு சமீர் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விஜயாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன்விவரம் பின்வருமாறு:-

கொலையான சமீர் ரவுடி என்பதும், இவர் மீது கோல்கும்பாஸ் போலீஸ் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே சமீருக்கு, தயபாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 4 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

அதன்பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் சேர்ந்துள்ளனர். அதையடுத்து தான் அமன்காலனியில் தயபாவுக்கு அவரது சகோதரர் அஸ்லம் பகவான் வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்துள்ளார். அங்கு அவ்வப்போது சமீர் வந்து சென்றுள்ளார். அவ்வாறு வரும் போது எல்லாம் சமீர், தயபாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தயபா, தனது சகோதரரிடம் சம்பவம் பற்றி கூறி சமீரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சமீரை 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கோல்கும்பாஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்