

சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, 'மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்' என பேசினார்.
இந்த பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது தயாநிதிமாறன் எம்.பி., சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.