தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

முத்தையாபுரம் பகுதியில் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள், செல்போனை பறித்துச் சென்றனர்.;

Update:2025-11-11 18:51 IST

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (வயது 39) என்பவர் நேற்று முன்தினம் இரவு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பாத்து ஓடை காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கார்த்திக்கிடம் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி கைச்செயின் மற்றும் வெள்ளி மோதிரம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கார்த்திக் நேற்று அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் வசந்தகுமார்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகிய 2 பேரும் கார்த்திக்கிடம் தகராறு செய்து அவர் அணிந்திருந்த வெள்ளி பொருட்களை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் மேற்சொன்ன இளஞ்சிறாரை கையகப்படுத்தியும், வசந்தகுமாரை கைது செய்தும் அவர்களிடமிருந்து வெள்ளி கைச்செயின் மற்றும் வெள்ளி மோதிரம் மற்றும் செல்போன் ஒன்றினை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்