ராமேசுவரம் மீனவர்கள் 30 பேருக்கு அபராதம் விதித்த இலங்கை கோர்ட்டு; செலுத்தாததால் மீண்டும் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது.;
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து, அந்நாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வவுனியா சிறையில் அடைத்தது. இந்த 30 பேரும் இன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி ரபீக் விசாரித்தார். எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்து முதல் முறையாக கைது செய்யப்பட்ட 26 மீனவர்களுக்கும் தலா ரூ.2½ லட்சம் (இந்திய மதிப்பு தலா ரூ.73 ஆயிரம்) அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார். மற்ற 4 மீனவர்கள் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால் இந்த மீனவர்களுக்கு தலா ரூ.2¾ லட்சம் (இந்திய மதிப்பு தலா ரூ.80 ஆயிரம்) அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை என்றும் உத்தரவிட்டார். இந்த அபராத தொகை செலுத்தப்படாததால் 30 மீனவர்களும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.