டிட்வா புயல் எதிரொலி; 300 இந்திய விமான பயணிகள் இலங்கையில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய விமான பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
சென்னை,
துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது.
எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகி உள்ள டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 3 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எங்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இந்திய பயணிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.