ஒரே நாளில் 50 ஜோடிகள் திருமணம் - களைகட்டிய திருச்செந்தூர் முருகன் கோவில்
சுபமுகூர்த்த தினங்களில் திருச்செந்தூர் கோவிலில் வைத்து ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், வார விடுமுறை தினமான இன்று திருச்செந்தூரில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் இன்று அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதே சமயம், சுபமுகூர்த்த தினங்களில் திருச்செந்தூர் கோவிலில் வைத்து ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், இன்றைய தினம் வருடத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் கோவில் வளாகத்தில் இன்று சுமார் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்கள் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் பிரகாரங்களிலும் திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை வாழ்த்துவதற்காக அவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் வருகை தந்திருந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று களைகட்டியது.