மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.;
சென்னை,
தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், 2 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணை முடித்து மீனவர்கள் 9 பேரும் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது. 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து 9 மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.