சென்னையில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சி மேற்கொண்டார்.;

Update:2025-12-30 13:45 IST

சென்னை,

சென்னை அடையாறு மண்டலத்தில் வார்டு-174க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பல்நோக்கு மையக் கட்டித்தினையும், உடற் பயிற்சிக் கூடத்தையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அடையாறு மண்டலத்தில் வார்டு-174க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பல்நோக்கு மையக் கட்டித்தினையும், உடற் பயிற்சிக் கூடத்தையும் இன்று (30.12.2025) திறந்து வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-174-க்கு உட்பட்ட வசந்தா பிரஸ் சாலையில், 174-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 9.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டிடம் மற்றும் பெசன்ட் நகர், 5-வது அவென்யூவில் மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையம் கட்டிடத்தினையும் திறந்து வைத்து இக்கட்டிடங்களில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட அடையாறு-2, நியாய விலைக் கடை மற்றும் பெசன்ட் நகர் 4-வது கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் வார்டு-174, பெசன்ட் நகர், 6-வது அவன்யூவில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர், சாஸ்திரி நகர் 4-வது சந்தில் 174-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூபாய் 10.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம் திறந்து வைத்து, இக்கட்டடத்தில் செயல்படும் சாஸ்திரி நகர் 2-வது நியாய விலைக்கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 275/- என குறைந்த விலையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு மற்றும் நெய் அடங்கிய பொங்கல் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்