அரியலூரில் திருமணத்திற்கு தயாராகி வந்த இளம்பெண் சாலை விபத்தில் உயிரிழப்பு
ஜெனிபருக்கு இன்னும் இரு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சன்னாவூர் மேலத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் திருமானூர் அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் ஜெனிபர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் வந்த டாடா ஏஸ் வாகனம் ஜெனிபரின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெனிபர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த ஜெனிபருக்கு இன்னும் இரு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாகவும், ஜனவரி மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு தயாராகி வந்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.