தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.;

Update:2026-01-13 14:50 IST

சென்னை,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

”அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பாகவும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

13-01-2026 அதிகாலையில், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட, இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கைவசம் உள்ளது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுத்திடவும், மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்