பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - போக்குவரத்து ஆணையர் தகவல்
தமிழகம் முழுவதும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.;
கோப்புப்படம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு தமிழகம் முழுவதும் 45 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு 13.01.2026 வரை 3,337 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு 547 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தணிக்கையின்போது இணக்க கட்டணம் ரூ.2,46,000 மற்றும் வரியாக ரூ.41,77,362 வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிறப்பு தணிக்கையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்ட 30 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பயணிகள் எந்தவித சிரமமின்றி அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.