புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.;
சேலம்,
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பூக்களின்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே குண்டு மல்லி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒருசிலர் குண்டு மல்லி விலையை கேட்டு வியப்படைந்தனர்.
இதேபோல், ஒரு கிலோ சன்னமல்லி ரூ.1,200, ஜாதி மல்லி ரூ.720, கனகாம்பரம் ரூ.1,000, முல்லை ரூ.1,200, சிறிய சிவப்பு ரோஜா ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.160, சம்பங்கி ரூ.160, சிவப்பு அரளி ரூ.240, சாமந்தி ரூ.50 முதல் ரூ.100, காக்கட்டான் ரூ.200, ஏற்காடு மலைக்காக்கட்டான் ரூ.120, நந்தியாவட்டம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டு மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூரில் மல்லிகை ரூ.2,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பூக்களின் விலை உயர்வை பொருட்படுத்தாமல் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் தேவைக்கு ஏற்ப பூக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.