அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நீண்ட காலமாக போராடிவரும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். ஆசிரியர்கள், ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற தாமதமாவதாலும், அவர்கள் உரிமையை பெற்றாக வேண்டி போராட்டங்களை நடத்துவதற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான CAS பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல், பல்கலைக்கழக துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யு.ஜி.சி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளின்படி வாரத்திற்கு ஒருவருக்கு வேளைப்பளு 16/14 மணிநேரம் என்ற விகிதத்தில் கணக்கிட்டு திரும்ப அழைத்தல், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வு பெற்றவுடன் வழங்குதல், 2019 CAS, போர்டு தொடர்பாக கட்டாய படிப்புகள் (Mandatory Courses) விசயத்தில் யு.ஜி.சி மற்றும் தமிழக அரசு விதிமுறைகளுக்கு எதிரான ஆட்சிக்குழு தீர்மானத்தை கைவிடுதல், ஆட்சிக்குழு மற்றும் கல்விக் குழுக்களில் ஆசிரியர் சங்கங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கல், அனைத்து நிர்வாகப் பொறுப்பு காலியிடங்களும் நிரப்புதல், 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த அனைவரும் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமித்தல், ஆசிரியர்களுக்கான Superannuation (ஓய்வூதியம்) உரிமை திரும்ப வழங்கல் ஆகிய ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிப்பப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.
நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடிவருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.