பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் முயற்சி: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்த ஒரு வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்தார்.;

Update:2025-11-22 01:37 IST

கடந்த 2018-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்த அரவிந்தன் (வயது 33) என்பவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, அரவிந்தனை கைது செய்தனர். புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிபதி ராமலிங்கம் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நேற்று (21.11.2025) குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம் பின்வருமாறு:

IPC 376 r/w 511-ன்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், IPC 451-ன்படி 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்ததோடு, மேற்சொன்ன தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் கூடங்குளம் காவல்துறையினர், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் (தற்போது விளாத்திகுளம் டி.எஸ்.பி.), சப்-இன்ஸ்பெக்டர் சகாய ராபின் ஷாலு (தற்போது ராதாபுரம் காவல் நிலையம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்