‘வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்’ - நிர்மலா சீதாராமன்
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.;
மும்பை,
வணிக நகரமான மும்பையில் நேற்று ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கிகளின் நிலை குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர், “நாட்டிற்கு பெரிய அளவிலான, உலகத்தரத்திலான வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கியும் மற்ற பிற வணிக வங்கிகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன” என்றார்.
மேலும் தொழில்துறைக்கு கடன் ஓட்டத்தை மேலும் விரிவுபடுத்த வங்கிகளை கேட்டுக்கொண்டார். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள தேவை, முதலீட்டை ஊக்குவித்து ‘நல்ல வட்டச் சுழற்சி’யை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவர் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் வங்கி பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் உள்ளூரின் வட்டார மொழியை கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். அவர் கூறுகையில், “ஒரு கிளையில் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரும் தனது வாடிக்கையாளரைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளூர் மொழியை பேசுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் அந்த வங்கியின் கிளை மானேஜராவது வட்டார மொழி பேச வேண்டும்” என்றார்.