பைக் மீது வேன் மோதி விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் இளங்கநாதபுரத்தைச் சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன் (வயது 49). இவரது மனைவி சரணிகா. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகன் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இவர் தனது பைக்கில் மெஞ்ஞானபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தருவைகுளம் அருகே செல்லும்போது எதிரே வந்த வேன், அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் சுடலைமுத்து மகன் கொம்பையா(35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.