தூத்துக்குடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.;

Update:2025-12-13 01:08 IST


சீரமைப்பு பணிகள்

தூத்துக்குடி-மீளவிட்டான் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில்பாதை பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ரெயில் இயக்கத்தின் செயல்திறன், பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில், வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இரண்டு ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே யார்டு பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி ரெயில் நிலையம் முழுமையாக மறுசீரமைக்கப்படுகிறது. தற்போதுள்ள சிக்னல் அமைப்புகள் நவீனப்படுத்தப்படுகிறது. 1-வது பிளாட்பாரம் 532 மீட்டரில் இருந்து 595 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது. 22 பெட்டிகள் கொண்ட ரெயில்களை கையாள ஸ்டேபிளிங் லைன் மற்றும் பிட் லைன் நீட்டிக்கப்பட்டு வருகின்றன, மேலும் என்ஜின் இயக்கத்தை எளிதாக்க கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. அதே போன்று டவர்வேகன்ஷெட், லெவல் கிராசிங் வாயில்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன.

இதே போன்று மீளவிட்டானில் சிக்னல்கள் நவீனமயமாக்கப்படுகிறது. ரெயில்களின் நுழைவு மற்றும் வெளியேறுதலை எளிமையாக்க உள் தண்டவாளங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. பிரதான பாதை செயல்பாடுகளை பாதிக்காமல் நீண்ட சரக்கு ரெயில்களை கையாள 750 மீட்டர் ரெயில்பாதை அமைக்கப்படுகிறது. பிரத்யேக வேகன் பராமரிப்பு பாதை உருவாக்கப்படுகிறது. புதிதாக என்ஜின் நிறுத்தும் இடங்கள், வெளியேறும் பாதைகள் உருவாக்கப்படுகின்றன. இருபுறமும் காங்கிரீட் மேற்பரப்புடன் சரக்குபாதை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு நீண்ட சரக்கு தளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு இரண்டு ரெயில் நிலையங்களும் ரெயில்வேயின் செயல்திறனை வலுப்படுத்தும்.

ரத்து

இந்த பணிகள் காரணமாக தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் ரெயில்களின் சேவைகள் மாற்றப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சியில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும் வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி (56726), தூத்துக்குடியில் இருந்து 8.30 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி (56723) பாசஞ்சர் ரெயிலும், 17, 18, 19, 20, 22, 23-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து காலை 7.45-க்கு புறப்படும் நெல்லை-தூத்துக்குடி (56722), தூத்துக்குடியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-நெல்லை (56721) பயணிகள் ரெயிலும், 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் மணியாச்சி-தூத்துக்குடி (56724), இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி-மணியாச்சி (56725) ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பகுதியாக நிறுத்தம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 27.01.2026 வரை பாலக்காடு சந்திப்பில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் பாலக்காடு சந்திப்பு - தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் (16792) நெல்லை-தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 15-ந் தேதி முதல் 28.01.2026 வரை தூத்துக்குடி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் (16235) தூத்துக்குடி-மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 20, 21, 22-ந் தேதிகளில் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ரெயில் வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. 19-ந் தேதி ஓகாவில் இருந்து புறப்படும் ரெயில் (16236) 21.12.25 அன்று கோவில்பட்டியுடன் நிறுத்தப்படும். அன்று இரவு 11.35 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து ஓகா ரெயில் (19567) இயக்கப்படும்.

20, 21, 22-ந் தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர்-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12693) 21, 22, 23-ந் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். 21, 22, 23-ந் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் தூத்துக்குடி-மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்