சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலகளாவிய நிலையான நகர்ப்புற போக்குவரத்துத் திட்டம் விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உலகளவில் நிலையான நகர்ப்புற போக்குவரத்துக்கான 2025-ம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது.;
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், உலகளவில் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான 2025-ம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த உயரிய விருது, The Global Energy and Environment Foundation (GEEF)-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2025 (Global Sustainability Awards 2025) நிகழ்வில் வழங்கப்பட்டது. நவம்பர் 20, 2025 அன்று புது டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மௌரியா ஹோட்டலில் நடைபெற்ற உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025-ன் போது இந்த விருது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் நடைபெற்ற வாழ்த்து விழாவில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அறிவியல் முறைப்படி மாற்று மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைப்பு அமைப்புகள், தொடர்ச்சியான சத்தம் மற்றும் அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த அங்கீகாரம் சென்னை நகரத்திற்கு பசுமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்தன்மை இலக்குகளுக்கான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2024-ம் ஆண்டில் உலகளாவிய நிலைத்தன்மை விருதை (Global Sustainability Award) பெற்றுள்ளது என்பதும் சிறப்பித்துக் காட்டப்படுகிறது.