அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு; ஆலந்தூரில் நாளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நியாயநிலை கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும், பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன.;
சென்னை,
உலக மாந்தர் அனைவருக்கும் உயிர் வளர்க்கும் உணவு பொருள்களை உற்பத்தி செய்திடும் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவி வரும் கதிரவனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கிடும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உழைப்பால் உணவளித்து பசிப்பிணி போக்குவதையே வாழ்வு என கொண்டுள்ள உழவர் பெருங்குடி மக்களுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலக தமிழர்களால் பன்னெடுங்காலமாக கொண்டாடப்படும் பாரம்பரியமான உன்னத விழா இனிய பொங்கல் திருநாள் 15.1.2026 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 170 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூபாய் 3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் நாளை (8.1.2026) காலை தொடங்கி வைக்கிறார்கள்.
அதேநேரத்தில் அமைச்சர் பெருமக்கள் மாவட்டங்களில் பொங்கல் பொருள்களையும், ரொக்கப்பணம் ரூபாய் 3,000/-யும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலை கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும், பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன.