கோவை சம்பவம்; கைதான 3 பேருக்கும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடம் நீதிபதி அப்துல் ரகுமான் விசாரணை நடத்தினார்.;

Update:2025-11-05 21:44 IST

கோவை, 

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். தனியார் விடுதியில் இருந்து தங்கி இருந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன்நகர் காட்டு பகுதியில், கடந்த 2-ந்தேதி இரவு காரில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 11 மணி அளவில் அந்த வழியாக மொபட்டில் 3 பேர் வந்தனர். இருள் சூழ்ந்த பகுதியில் கார் நிற்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தனர். மேலும் கல்லூரி மாணவியை தூக்கி சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவியின் காதலன் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த 3 பேரும் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

கைதான மூன்று பேரும் சிங்கமன்னாரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்தி என்ற காளீஸ்வரன்(20). இவர்களது உறவினரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி (20) என தெரியவந்தது. இதில் சதீஷ், கார்த்தி ஆகியோர் அண்ணன், தம்பி ஆவார். காலில் குண்டடி பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரிடமும் நீதிபதி அப்துல் ரகுமான் விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் நவ-19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்