முதல்-அமைச்சர் குடும்பம் தொடர்பாக அவதூறு: பியூஷ் கோயலுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்

சமத்துவக் கருத்துக்களுக்கு கொள்கை வழி செயல்வடிவம் தருவதில் திமுக அரசு சிறப்புப் பெற்றுள்ளது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது;

Update:2026-01-22 14:59 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றிய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நேற்று (21.01.2026) மதராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக அரசு மற்றும் முதல்-அமைச்சர் குடும்பம் தொடர்பாக விஷமத்தனமான அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சமூகத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களை சமூக வட்டத்திற்கு வெளியே நிறுத்திய, சமூக புல்லுருவித்தன, புரோகிதக் கருத்துக்களுக்கும், புராண புரட்டுகளுக்கும் எதிராக அறிவியல் கண்ணோட்டத்தையும், பகுத்தறிவு கருத்துக்களையும் ஒரு நூறாண்டுகளாக பரப்புரை செய்து, தமிழ் சமூகத்தை பண்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கருத்துக்களுக்கு கொள்கை வழி செயல்வடிவம் தருவதில் திமுக அரசு சிறப்புப் பெற்றுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பம் சாதி, மத அடையாளங்களை கடந்து பொதுவாழ்விற்கு பெருமை சேர்த்த சிறப்புக்குரியது.இதனையெல்லாம் மறைத்துவிட்டு, திமுக அரசையும், முதல்-அமைச்சர் குடும்பத்தையும் இந்து விரோத அடையாளமாக்க முயற்சிக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். இதனை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

சமூக வாழ்வில் இயல்பான இறையிலாளர்களை, ஆன்மீக நம்பிக்கையாளர்களை இந்து மதவெறியர்களாக்கி, மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அணி திரட்டி, நல்லிணக்க சூழலும், சமூக அமைதியும் நீடித்து வரும் தமிழ்நாட்டை மோதல் களமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்