சென்னை,
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம், நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காத நிலையில், ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனால் ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமம் பெற்றுள்ள ஆர்.எப்.டி. பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் வெளிநாடுகளில் ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகாது. நாளைதான் சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக இருப்பதால், இந்தியாவிலும் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசியல் ரீதியாக வழங்கப்படும் அழுத்தம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“சினிமாவுக்குள் அரசியல் அனுமதி தேவையில்லை. தணிக்கைத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றின் வரிசையில் தணிக்கை வாரியத்தையும் பயன்படுத்துகிறது. அதிகாரத்தின் முன் கலையை மண்டியிடச் செய்தால் ஜனநாயகம் நிலைத்து இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.