டித்வா புயல் முன்னெச்சரிக்கை; அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.;
சென்னை,
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் தற்போது இலங்கையின் மேல் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (29.11.2025) மற்றும் நாளை மறுதினம் (30.11.2025) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டில் கடுமையான மழைபொழிவு ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே மாநில பேரிடர் மீட்பு படையின் 16 அணிகளும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 அணிகளும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பேரிடர் சூழலை திறம்பட கையாளுவதற்காக, கூடுதலான தேசிய பேரிடர் மீட்பு படையை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருமாறும், தேவை ஏற்பட்டால் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகிய மத்திய படைகளை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொலைதொடர்பு நிறுவனங்களுடனும், எண்ணெய் நிறுவனங்களுடனும் ஆயத்த நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரக கால செயல்பாட்டு மையத்திற்கு வருகை தந்து, 14 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக டித்வா புயல் காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறையினரும் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் அறிவுறுத்தினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து முகாமிட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
அத்துடன், முகாம்களில் மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனறும், குடியிருப்பு பகுதியில் வெள்ளநீரை அகற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், புயல் காற்றினால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதனை சீர்செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய தேதிகளில் தெற்கு பகுதிகளிலும், டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள். ரெட் அலர்ட் விடுத்திருக்கும் மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு ஆய்வு மேற்கொண்டோம். ஏற்கெனவே, நேற்றையதினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்.
எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைவரும் அவரவர்களுக்குரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார்கள். ஏற்கெனவே, எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறோம். மின் கம்பிகள் எங்கும் அறுந்து விழாமல் விபத்து ஏற்படாமல், கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். எனவே, எச்சரிக்கை செய்யும் அந்த பணியைதான் இன்றைக்கு நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
சென்னையும் பாதிக்கப்படும். சென்னையிலும் அதிகம் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள். தேவையான இடங்களில் முகாம்களும், அங்கு உணவுகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதை கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள். புயலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
டெல்டா மாவட்ட மக்களை தமிழக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிவருகிறார். அதுபோன்று எதுவும் கிடையாது. அவர் மக்களை வஞ்சிக்காமல் இருந்தால் போதும். அதுதான் முக்கியம். அவர் எப்போதும் அப்படிதான் சொல்லிக்கொண்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.