அவதூறு வழக்குகள்: சி.வி.சண்முகம் எம்.பி. மீதான விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
சி.வி.சண்முகம் எம்.பி. மீதான அவதூறு வழக்குகள் விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்றும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் 1.5.2023 அன்றும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இக்கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சி.வி.சண்முகம் எம்.பி. மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம், தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளும் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் அ.தி.மு.க. வக்கீல்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோர் ஆஜராகி சி.வி.சண்முகம் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இம்மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படியும் அ.தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்குகளை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி, இதன் விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.