மதுரையை வெறிநாய்க்கடி மையமாக மாற்றிய "வளர்ச்சி" அரசியல் - நயினார் நாகேந்திரன்

நடப்பாண்டில் மதுரையில் 18,000 பேர் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-10 19:01 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 2025-ஆம் ஆண்டு மட்டும் மதுரையில் 18,000 பேர் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அதிலும் கடந்த 2024-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், தற்போது 4,000 வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,700 பேர் வெறிநாய்க்கடியால் அவதியுறுவதாகவும் வெளிவந்துள்ள தரவு, மதுரை மாநகர் நாய்க்கடிகளின் மையமாக உருவெடுத்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தெருக்கள் தோறும் குப்பைக்கூளமாகவிட்டு இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கச் செய்ததோடு, தெருநாய்களையும் பெருகவிட்டு சங்கம் வைத்த மாநகரை நோய்களின் சங்கமாக உருமாற்றி வருகிறது திமுக அரசு.

ஊழல் பெருச்சாளிகள் மூலம் மதுரை மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டித் தின்றது போதாதென்று, இப்படித் தெருநாய்களைப் பெருகவிட்டு மக்களின் உயிரோடும் விளையாடுவது தான், உங்களின் "வளர்ச்சி" அரசியலா முதல்-அமைச்சரே?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்