கறிக்கோழி வளர்ப்புக் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைப்பு
கறிக்கோழி வளர்ப்புத் தொழில் நடைபெறும் மாவட்டங்களின் கலெக்டரிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
சென்னை,
கறிக்கோழி வளர்ப்புக் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாட்டில் வருடத்திற்கு சுமார் 50-55 கோடி கறிக்கோழி வகைக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 20,000 கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் உள்ளனர். மேலும், ஏறத்தாழ 66 ஒருங்கிணைப்பாளர்கள் (integrators) இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கறிக்கோழி உற்பத்திச் செலவு உள்ளிட்ட, சிரமங்கள் குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வழங்கியதன் அடிப்படையில், 29.12.2025 மற்றும் 21.1.2026 ஆகிய தேதிகளில் கால்நடை பராமரிப்பு இயக்குநர் அவர்கள் நடத்திய கூட்டத்தில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் (Integrators) (ம) கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களிடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றனர். இவர்களுக்கிடையே உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒப்பந்த விதிகளுக்குட்பட்டே தீர்வு காண முடியும் என சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவுப் பிரிவு, வேளாண்மை துறை அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசித்து உள்ளீடுகள், தரம் மற்றும் செலவு, உற்பத்திப் பெருக்கத்திற்கான வழிவகைகள், வளர்ப்புப் பணிகள் மற்றும் பண்ணைச் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நோய்ப்பரவல் மற்றும் மருத்துவ சிகிச்சையிலிருக்கும் இடைவெளி, உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கிடையேயான பிரச்சினை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்புத் தொழில் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது என கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.