கடலூரில் நாளை தேமுதிக உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு

தேமுதிக உரிமை மீட்பு மாநாட்டுக்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-08 05:18 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றுகிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடக்கும், இந்த மாநாட்டில் தே.மு.தி.க. கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டிற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் நடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநாட்டு திடலில் மேடை அமைக்கும் பணி, சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், கேப்டனை பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மாநாட்டில் தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்