வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் திமுக நிர்வாகிகள்: அன்புமணி குற்றச்சாட்டு
திமுகவினர் கைகாட்டும் வீடுகளுக்கு மட்டும் தான் படிவங்கள் வழங்கப்படுகின்றன என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக திமுகவினரே கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெறக்கூடும் என்று முகாரி ராகம் பாடிக் கொண்டு, இன்னொருபுறம் இத்தகைய முறைகேடுகளில் திமுகவினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக திமுகவின் ஐ.டி. பிரிவு, இளைஞரணி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளே வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கீட்டு விவரங்களை நிரப்பி வாங்குகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்கும் இவர்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு இதுவரை படிவங்களைத் தரவில்லை. கடைசி நேரம் வரை அவர்களுக்கு படிவங்களைத் தராமல் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தான் திமுகவின் மறைமுகச் செயல் திட்டமாகும்.
சில இடங்களில் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் எதிர்க்கட்சியினரிடம் சிக்கி, தப்பி ஓடிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஓர் ஊரில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடமிருந்து திமுக நிர்வாகிகள் வாங்கி, தங்கள் கட்சியினர் ஐ.டி பிரிவினர் மூலம் வீடுகளுக்கு கொடுத்து வாங்குவதை எதிர்க்கட்சியினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது தொடர்பான காணொலிகள் சமூகவலைத் தளங்களில் வேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இது மட்டுமின்றி, இன்னும் பல இடங்களில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுடன் திமுக நிர்வாகிகளும் வீடு வீடாக செல்கின்றனர். திமுகவினர் கைகாட்டும் வீடுகளுக்கு மட்டும் தான் படிவங்கள் வழங்கப்படுகின்றன. இதுவும் கூட திமுகவுக்கு எதிராக வாக்குகளை பட்டியலிலீருந்து நீக்குவதற்கான சதித் திட்டம் தான். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை எதிர்ப்பதாகவும், இது திமுக ஆதரவு வாக்காளர்களை நீக்குவதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாரி ராகம் பாடி வருகிறார்.
இன்னொரு பக்கம் திமுகவினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார். ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொருபுறம் மோசடிகளை அரங்கேற்றுவது தான் காலம் காலமாக திமுகவினரின் முழுநேரத் தொழில். அந்த வழக்கத்திற்கு இந்தத் தேர்தலும் தப்பவில்லை.இன்னும் கேட்டால் களத்தில் தாங்கள் செய்யும் முறைகேடுகள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது போல திமுக தொடர் நாடகங்களை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இதே சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு வெளிமாநில இ.ஆ.ப அதிகாரியை பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் சட்டவிரோதமான முறையில் ஈடுபடுத்தப்பட்ட திமுகவினர் மீது சட்டப்படியாக குற்றவியல் நடவடிக்கைகளும், அதற்கு இடம் கொடுத்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் உடனே மேற்கொள்ளப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.