8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.;
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம், கட்டப்புளியை சேர்ந்த பாபநாசம் (வயது 75) என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, பாபநாசத்தை கைது செய்தனர்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரனையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (25.11.2025) குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.