பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 12 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 12 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.;

Update:2025-07-08 17:22 IST

கடந்த 2018-ம் ஆண்டு ஓடைமறிச்சான், செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி (65) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முக்கூடல் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, முத்துகுட்டியை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவற்ற நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நேற்று (7.7.2025) முத்துகுட்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. சத்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி (தற்போது திருநெல்வேலி மாநகரம்) மற்றும் காவல் துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2005ம் ஆண்டில் மட்டும், இதுவரை 12 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 12 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்