தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம்; த.வெ.க. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்;
சென்னை,
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க.வை அடுத்து த.வெ.க. சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அருண்ராஜ், ராஜ்மோகன் என மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். இந்த குழு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளை பெறுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.