செல்போன் பேசியதை கண்டித்த தந்தை.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி இந்திராணி. இவர்களது மகள் நந்தினி(17). பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் நந்தினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.
இதை பார்த்த காளியப்பன், ‘செல்போனை வைத்துவிட்டு தூங்கு’ என அவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த நந்தினி தனது சித்தப்பா மகன் குணசேகரனிடம், தன்னை தந்தை திட்டிவிட்டதாக செல்போனில் தொடர்பு கொண்டு கூறிவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, நந்தினி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.