சென்னை திருவொற்றியூரில் தீ விபத்து - பெண் உடல்கருகி பலி
தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.;
சென்னை,
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலேகா. இவருக்கு திருமணம் ஆன நிலையில், கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இன்று ஸ்ரீலேகாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது ஸ்ரீலேகாவின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதே சமயம், தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதே சமயம், உள்ளே இருந்த ஸ்ரீலேகா உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.