முன்னாள் மத்திய உள்துறை மந்திரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார்;
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). இவர் 2004 முதல் 2008 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். மேலும், பல்வேறு கால கட்டங்களில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாகவும், கவர்னராகவும், மக்களவை சபாநாயகராகவும் செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். மராட்டியத்தின் லட்டூரில் உள்ள வீட்டில் சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
முன்னாள் மத்திய உள்துறை மந்திரியும், மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பொதுவாழ்வில் அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட அவர், மக்களவைத் தலைவர், கவர்னர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தமது கடமையைத் திறம்பட ஆற்றியவர்.
கருணாநிதி மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.