நெல்லை-தூத்துக்குடியில் கனமழை; திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
நெல்லை-தூத்துக்குடி, தென்காசியில் பரவலாக கனமழை பெய்தது. திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.;
நெல்லை,
தென்கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காயல்பட்டினம், ஆலந்தலை, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பரவலாக பெய்தது. இதனால் திருச்செந்தூர் பிரதான சாலைகளான டி.பி.ரோடு, காமராஜர் சாலை, சபாபதிபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மேலும், திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கு மின் மோட்டார் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. நேற்று பகலில் மழை இல்லை. மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதேபோல் மெஞ்ஞானபுரம் சுற்று வட்டாரங்களான நங்கை மொழி, வள்ளியம்மாள்புரம், மானாடு, குருநாதபுரம், பரமன்குறிச்சி, நாலுமூலைக்கிணறு ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் வெயில் அடித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நெல்லை டவுன், பேட்டை, கோடீஸ்வரன் நகர், பழையபேட்டை, அபிஷேகப்பட்டி, கல்லூர், சுத்தமல்லி ஆகிய பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, திரவியநகர், ஆலங்குளம், கடையம், சாலைப்புதூர், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.