ஓசூர் அருகே பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா - பீகார் பெண் கைது
கேமார பொருத்தப்பட்டதற்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஒசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலத்தில் டாடா தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக டாடா தொழிற்சாலை சார்பில் பெண்கள் விடுதி கடப்பட்டுள்ளது. இங்கு 6,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், பெண்கள் தங்கி இருந்த குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக நேற்று இரவு விடுதியில் தங்கியிருந்த 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து ஓசூர் உதவி கலெக்டர் அக்ரிதிசேத்தி மற்றும் எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீசார் விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி நீலு குமாரி குப்தா (22), என்பவர் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியது தெரியவந்தது. இதனையடுத்து உத்தனப்பள்ளி போலீஸார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேமார பொருத்தப்பட்டதற்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.